The brain is Sasikala Pushpa the expelled AIADMK MP??
ராம் மோகன் ராவ் வீடு, அலுவலகத்தில் ரெய்டு; பின்னணியில் சசிகலா புஷ்பா திரட்டிய தகவல்கள்
சென்னை: மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடலாமா? என்பது போலத்தான் இந்தத் தகவல் இருக்கும். ஆனால், அதுதான் உண்மை என்கிறது டில்லி அரசியல் வட்டாரங்கள்.
திடீர் வேகம் :
கரூர் அன்புநாதனில் ஆரம்பித்த விவகாரம், நத்தம் விசுவநாதனை அடைந்து, வேலூர் சேகர் ரெட்டியிடம் சென்று, தற்போது தலைமைச் செயலர் ராம் மோகன் ராவிடம் வந்து நிற்கிறது. இத்தனை காலமும் அமைதியாக இருந்த வருமான வரித் துறை, ஜெயலலிதா மறைந்த பின், ஏன் வேகமாகி இருக்கிறது. இதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி இருக்கிறது; சதி இருக்கிறது என்று சொல்லி, தமிழகத்தின் அரசியல் கட்சிகள் சில, பா.ஜ.,வை நோக்கி சுட்டு விரல் நீட்டுகின்றன.
துவங்கிய ஆட்டம்:
ஆனால், இந்த விஷயம் இன்று - நேற்று ஆரம்பமானதல்ல. என்றைக்கு, சசிகலா புஷ்பாவை ஜெயலலிதா போயஸ் தோட்டத்தில் வைத்து அடித்ததாக, ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா பரபரப்பு கிளப்பினாரோ, அன்றைக்கே துவங்கி விட்டது பா.ஜ.,வின் ஆட்டம். சசிகலா புஷ்பா, ராஜ்யசபாவில் ஜெயலலிதா மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசிய பின், சில நாட்களில், பிரதமர் மோடியை சந்தித்தார். தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று அவர் கேட்க, தயாராக வைத்திருந்த மொத்த விஷயங்களையும் அவர் ஆதாரங்களுடன் எடுத்து வைத்தார்.
பக்கபலமாக பா.ஜ., :
ஒன்றும் கவலைப்பட வேண்டாம்; உங்களுக்கு பா.ஜ., அரசு முழு பக்கபலமாக இருக்கும். தமிழகத்தில் இருக்கும் ஆட்சி அதிகாரங்களின் மோசடிகளை மட்டும் ஆதாரங்களுடன் திரட்டி, மத்திய அரசுக்கு அனுப்பி வையுங்கள். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் விவரங்களை சொல்லி விடுகிறேன். அவர்களை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று சொன்ன பிரதமர் மோடி, சொன்னபடியே, சசிகலா புஷ்பாவுக்கு முழு பாதுகாப்பு வழங்கினார். தன்னை கைது செய்யும் ஆபத்து இருந்த நிலையிலும், துளியும் கவலையின்றி சசிகலா புஷ்பா தமிழகம் வந்து போனது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், பின்புலத்தில் பா.ஜ., என்ற மாபெரும் சக்தி இருந்ததால்தான், அவர் தைரியமாக தமிழகம் வந்தார்.
சந்திப்பு:
சென்னை, அண்ணா நகரில் உள்ள தன் வீட்டில் தங்கியபடியே அவர், தமிழக அரசு நிர்வாகத்தின் மீது அதிருப்தியுடன் உள்ள பலரையும் சந்தித்தார். விவரங்களை ஆதாரங்களுடன் திரட்டி, மத்திய அரசுக்கு அனுப்பினார். அவர் அனுப்ப அனுப்ப விவரங்களை திரட்டிக் கொண்ட மத்திய அரசு, தான் ஏற்கனவே திரட்டி வைத்திருந்த விவரங்களை சேர்த்துக் கொண்டு, அதிரடி ஆபரேஷனை துவங்கியது. அந்த ஆபரேஷனில்தான், அன்புநாதன், நத்தம் விசுவநாதன், சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவ் என வரிசையாக பலரும் சிக்கினர்.
விரைவில் சிக்குவர் :
சேகர் ரெட்டியிடம் தொடர்புடையவர்களாக சொல்லப்படும் அமைச்சர்கள் ஐந்து பேரும் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் கூட விரைவில் சிக்குவர் என்கிறது வருமான வரித் துறை வட்டாரங்கள். ராம் மோகன் ராவ் போலவே, தமிழக அரசு அதிகார மட்டங்களில் இருந்து கொண்டு, அதிகாரத்தை பயன்படுத்தி அளவுக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கும் அதிகாரிகள் பலரது பெயர்களையும், பிரதமர் மோடி, சேகரித்து வைத்துள்ளார். விரைவில் அவர்களை நோக்கியும் வருமான வரித் துறையினரை பாய விடுவார் என்கிறது, டில்லி அதிகார வட்டாரங்கள்.
ஆதாரங்கள் :
தமிழக பா.ஜ., தலைவர்கள் மூலமாகவும் பல்வேறு தகவல்களை திரட்டி வைத்திருக்கும் பிரதமர் மோடி, முதல்வர் பன்னீர் செல்வத்தையும், முழுமையாக தன் கரங்களுக்குள் கொண்டு வந்து விட்டார் என்றும், முதல்வர் பன்னீர்செல்வமும், தமிழகத்தில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அதிகார மட்டம் குறித்து, நிறைய விஷயங்களை சொல்லி இருப்பதாகவும் டில்லியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சூசகம்:
தேவையானால், போயஸ் தோட்டத்தை நோக்கியும் வருமான வரித் துறையினர் செல்ல வெகு நேரம் ஆகாது என்று சூசகமாக எதையோ சொல்கிறார் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர்.தமிழகத்தைப் பொறுத்த வரையில், பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க., அரசு தொடர்ந்து செயல்படுவதில், இப்போதைக்கு, பிரதமர் மோடி தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை. ஆனால், சுய நலனுக்காக, பன்னீர்செல்வம் ஆட்சியை கலைக்க முயல்வது; அவரை அப்பதவியில் இருந்து விரட்டிவிட நினைப்பது என யார் நினைத்தாலும், அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் பா.ஜ., அரசு இயங்கி செயல்படும் என, டில்லி மூத்த அரசியல்வாதிகள் அடித்து கூறுகின்றனர்.
சி.பி.ஐ., விசாரணை?
இதற்கிடையில், தற்போதைய ரெய்டுக்கு பின்னணியில் சசிகலா புஷ்பாவின் கரங்கள் இருப்பதை சொல்லும், டில்லி அரசியல் வட்டாரங்கள் சொன்ன லேட்டஸ்ட் தகவல் - சசிகலா புஷ்பாவுக்கு, பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் தகவலின்படி, அவர் எந்த நேரமும் பிரதமர் மோடியை சந்திப்பார். அப்போது, ஜெயலலிதா மரணத்தில் மறைந்து கிடக்கும் மர்மங்களை வெளியில் கொண்டு வர வேண்டும்; அதற்கு, சி.பி.ஐ., விசாரணைக்கு விட வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்க உள்ளார். இத்தனைக்கும் பின்னும் முழக்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சிடலாமா என கேட்டால், யாரிடமும் பதில் இருக்க முடியாது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1674328